தஞ்சையில் கார்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: திமுக நிர்வாகிகள் இருவர் பலி

தஞ்சையில் இரு கார்கள் நேருக்கு நேராக மோதிக்கொண்ட விபத்தில்  திமுகவினர் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலிருந்து தஞ்சை நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு காரும், தஞ்சையில் இருந்து ஊரணிபுரம் நோக்கி  சென்ற ஒரு காரும் இன்று மதியம் நாஞ்சிக்கோட்டை சாலை ருக்மணி கார்டன் எதிரில் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் இரண்டு கார்களும் உருக்குலைந்தன. இதில் கார்களில் இருந்தவர்கள் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்தைப் பார்த்ததும் உடனடியாக  அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டதுடன்  போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். வல்லம் டிஎஸ்பி நித்யா, இன்ஸ்பெக்டர் வசந்தி மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.  இந்த விபத்தில்  தஞ்சை மாவட்டம் ஊரணிபுரம் குறிஞ்சி நகரைச் சேர்ந்த முகமது சுல்தான்  மகனும்,  திமுக மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளருமான சேட் முகமது (60), ஊரணிபுரம் காமராஜ் நகரை சேர்ந்த துரைராஜ் மகனும்  திமுக நகர செயலாளருமான  சஞ்சய் காந்தி (45) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் படுகாயம் அடைந்த  ஒரத்தநாடு, புது விடுதி மேலத்தெருவை சேர்ந்த அய்யாக்கண்ணு மகன் சுந்தர் (45), ஊரணிபுரத்தைச் சேர்ந்த குப்புசாமி மகன் ரமேஷ், உத்தமநாதன் மகன் ராஜா (42), மற்றொரு காரை ஓட்டி வந்த டிரைவர் மன்னார்குடி மேலவாசல் சோழன் நகரை சேர்ந்த சிவபுண்ணியம் மகன் கௌதமன் (36), கோவிந்தராஜ் மகன் செல்லபாண்டியன், மன்னார்குடி ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன், மன்னார்குடி கூட்டுறவு சங்கத் தலைவர் வைத்தியநாதன் ஆகிய 7 பேர் மீட்கப்பட்டு   தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து  குறித்து  தஞ்சை தமிழ் பல்கலைக்கழக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விபத்தில் திமுகவினர்  இரண்டு நிர்வாகிகள் இறந்துள்ளதும் மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதும் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

إرسال تعليق

0 تعليقات