21 வயதில் இந்தியாவின் முதல் இளம் மேயராக பதவியேற்கும் ஆர்யா ராஜேந்திரன்.

கேரளாவை சேர்ந்த 21 வயதான ஆர்யா ராஜேந்திரன் திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராக பதவியேற்க உள்ளார். இதன்மூலம் நாட்டில் இளவயதில் மேயராகும் பெண் எனும் சாதனையை அவர் படைக்க உள்ளார்.

கேரள மாநிலத்தின் உள்ளாட்சி அமைப்புகளுக்கானத் தேர்தல் கடந்த 8, 10, 14 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்), பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) ஆகியவை தேர்தலை எதிர்கொண்டன. 

கேரள உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு உள்ள நிலையில் பல்வேறு கட்சிகளும் நடந்து முடிந்த தேர்தலில் அதிகளவு இளவயதினரை தேர்தல் களம் இறக்கின. இதில் ஆளும் இடது முன்னணி அரசின் வேட்பாளர்கள் பெருவாரியான இடங்களைக் கைப்பற்றினர்.

அந்த வகையில் முடவன்முகலைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரான ஆர்யா ராஜேந்திரன் தேர்தலில் போட்டியிட்டு அப்பகுதியின் மாமன்றப் பிரதிநிதியாக தேர்வானார். 

இந்நிலையில் 21 வயதேயான ஆர்யாவை தற்போது திருவனந்தபுரம் மேயராக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்துள்ளது. இதன்மூலம் நாட்டில் மிக இளம்வயதில் மாநகராட்சி மேயராகும் சாதனையை ஆர்யா படைத்துள்ளார்.

இந்திய மாணவர் சங்கத்தின் கேரள மாநிலக் குழுவில் உள்ள ஆர்யா ஆல் செயிண்ட்ஸ் கல்லூரியில் இளங்கலை கணிதம் பயின்றுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாகப் பணியாற்றி வரும் ஆர்யா குழந்தைகளுக்கான பாலர் சங்கத்தின் மாநிலத் தலைவராக உள்ளார்.

இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர் தனக்கு ஒப்படைக்கப்பட்டப் பணியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...

கருத்துரையிடுக

0 கருத்துகள்