3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றது போல சி.ஏ.ஏ.வை ரத்து செய்ய வேண்டும்; ஜவாஹிருல்லா

3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றது போல் குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் வாபஸ் பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.

வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்திருப்பது சளைக்காமல் அல்லும் பகலும் விவசாயிகள் நடத்திய போராட்டத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என குறிப்பிட்டிருக்கிறார். இந்திய விவசாயிகளின் போராட்டம் உலக வரலாற்றில் உன்னத இடத்தை பிடிக்கும் என ஜவாஹிருல்லா நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

மூன்று வேளான் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தினர். டெல்லியில் ஒன்றிய அரசின் பல்வேறு அடக்குமுறைக்கு அஞ்சாமல் விவசாயிகள் அறவழியில் கடும் போராட்டங்களைக் கடந்த ஆண்டு நவம்பர் 26 அன்று முன்னெடுத்தனர். கடும் குளிரிலும், கொடும் வெட்பத்திலும் கொரோனா அச்சுறுத்தலிலும் மனம் தளராமல் தலைநகர் டெல்லி எல்லையில் விவசாயிகள் போராடி வந்தனர். இந்திய வரலாற்றில் மட்டும் அல்ல உலக வரலாற்றில் உரிமைகளுக்காக நடத்தப்பட்ட உன்னத போராட்டமாக விவசாயிகளின் போராட்டம் அமைந்தது. மக்கள் உணர்வுகளுக்கு எதிராகவும் நலன்களுக்கு எதிராகவும் சட்டங்களை இயற்றி வரும் பிரதமர் மோடியின் சர்வாதிகார போக்கிற்கு விவசாயிகள் தங்கள் உன்னத போராட்டத்தின் மூலம் தகுந்த பாடத்தைக் கற்பித்துள்ளனர்.

பிரதமர் மோடி அவர்கள் மூன்று வேளான் சட்டங்களும் திரும்பப் பெறப்படுகின்றன என்ற அறிவிப்பை நடைமுறைக்குக் கொண்டு வரும் வகையில் வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மூன்று வேளான் சட்டங்களும் ரத்து செய்யப்படுகின்றன என்ற சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். மக்களின் உண்மையான போராட்டம் சர்வாதிகாரத்தையும் அடிபணிய வைக்கும் என்பதற்கு மூன்று வேளான் சட்டங்களும் ரத்து என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பு மற்றொரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

விவசாயிகளின் அறவழிப் போராட்டத்தைத் திசை திருப்ப ஒன்றிய அரசு எடுத்த அத்தனை முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. மூன்று வேளான் சட்டங்களை ஆதரித்து அதிமுகவிற்கும் விவசாயிகள் மறைமுகமாகப் பாடம் புகட்டி உள்ளனர் என்றே கருதலாம். பிரதமர் மோடியின் பிடிவாத போக்கினால் வேளான் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்ட களத்தில் உயிர் நீத்த 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் கணிசமான இழப்பீடு ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்து விளக்குதல் முதலிய மக்கள் விரோத சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்