தீப்பெட்டியின் விலை இன்று முதல் 2 ரூபாயாக உயர்வு!

தமிழகத்தில் 14 ஆண்டுகளுக்கு பிறகு தீப்பெட்டிகளின் விலை 2 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது.

சிவகாசியில் கடந்த அக்டோபர் மாதம் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கக் கூட்டம் நடந்தது. இதில் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டி ஒன்றின் விலை 2 ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தீப்பெட்டி ஒன்றின் விலை 2 ரூபாய் உயர்ந்து இன்று முதல் அமலுக்கு வருகிறது.

கடந்த சில மாதங்களாக தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான முக்கிய மூலப்பொருள்களான பாஸ்பரஸ், குளரேட், மெழுகு, அட்டை, பேப்பர் என அனைத்த பொருள்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

தீபம் ஏற்றுவது முதல் வீட்டில் சமையல் செய்வது அன்றாட அவசிய வேலைக்கு தீப்பெட்டியின் பங்கு முக்கியமானது. ஒரு ரூபாய் கொடுத்தால் ஒரு தீப்பெட்டி கிடைக்கும். தீப்பெட்டி விற்பனை விலையானது கடந்த 2007ஆம் ஆண்டு முதல் மாற்றம் இல்லாமல் ஒரு ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது அதன் மூலப் பொருட்களின் விலை ,மின்சார கட்டணம் ,லாரி வாடகை உள்ளிட்டவை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தீப்பெட்டி விலையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை உற்பத்தியாளர்கள் மத்தியில் எழுந்தது.

தீப்பெட்டி தொழிலில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் சுமார் 6 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெற்று வருகின்றனர். இதில் 90 சதவீதம் பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டி இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டு இருப்பதால் வாகனங்களில் வாடகை கட்டணம் உயர்ந்து வருவதால் தீப்பெட்டி உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் பல பொருட்கள் விலை உயர்ந்தாலும் தீப்பெட்டி விலை உயர்த்தப்படாமலேயே இருந்தது. சிவகாச உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் டிசம்பர் 1ஆம் தேதி முதல் 50 குச்சிகள் கொண்ட தீப்பெட்டியை ரூபாய் 2க்கு விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டி ஒன்றின் விலை 2 ரூபாய் விற்பனை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்