ஹிஜாபை அற்றச்சொன்ன பாஜக முகவர் கைது.. 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு..

மதுரை மாவட்டம் மேலூரில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்ணை ஹிஜாபை அகற்றச்சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக பூத் ஏஜெண்ட் கைது செய்யப்பட்டார். மத உணர்வை புண்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவுபெற்றது. இந்த நிலையில் மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டு அல்அமீன் பள்ளி வாக்குச்சாவடியில் இஸ்லாமிய பெண் ஒருவர் வாக்களிக்க வந்தார். ஹிஜாப் அணிந்து வந்த அந்தப் பெண்ணிடம் , அங்கிருந்த பா.ஜ.க. பூத் ஏஜெண்ட் கிரிராஜன், ஹிஜாப்பை அகற்றிவிட்டு வாக்களிக்குமாறு தெரிவித்து வாக்குவாதம் செய்தார். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கிரிராஜனின் கருத்துக்கு அங்கிருந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பிற கட்சி வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பதிவு மையத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு வாக்குப்பதிவும் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. 

இதனையடுத்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பா.ஜ.க பூத் ஏஜெண்ட் கிரிராஜன் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் அல்அமீன் பள்ளியில் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது. மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்க அங்கு கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது கிரிராஜன் மீது மதத்தின் உணர்வை புண்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கிரிராஜனை கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே கிரிராஜன் மீது பொதுசொத்தை சேதப்படுத்திய வழக்கு நிலுவையில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்