இனி ஆதார் அட்டை நகலை கொடுக்காதீங்க.. தரவுகளை தவறாக பயன்படுத்தக் கூடும் - மத்திய அரசு

ஆதார் அட்டை தரவுகளை தவறாக பயன்படுத்தக் கூடும் என்பதால் தனியார் நிறுவனங்களில் அதன் நகலை சமர்ப்பிக்க வேண்டாம் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இது குறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில்,  உரிமம் இல்லாத விடுதிகள் அல்லது திரையரங்குகள் போன்ற தனியார் நிறுவனங்கள் ஆதார் அட்டை தகவல்களை வாங்கவும்,  அதன் நகல்களை எடுக்கவும் அனுமதி கிடையாது  என்றும் ஆதார் சட்டம் 2016 இன் படி அது குற்ற செயல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டையை பார்க்க வேண்டும் அல்லது அதன் நகல் வேண்டும் என தனியார் நிறுவனங்கள் கேட்டால்,  இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ( Uidai) வழங்கியுள்ள உரிய பயனாளர் உரிமை இருக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டும் என்று கூறியுள்ளது.  ஆதார் அட்டை நகலை சமர்ப்பிக்க வேண்டும் என்றால்,   அதற்கு பதிலாக பயனாளர்கள் கடைசி நான்கு எண்களை மட்டுமே காட்டும் வகையிலான ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும்   பொது இடங்களில் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்வதை பொதுமக்கள்  தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

ஒருவேளை அவ்வாறு பதிவிறக்கம் செய்தால் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆதார் அட்டையை கணினியிலிருந்து முற்றிலுமாக அழித்து விட்டதை உறுதி செய்துகொள்ள  வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆதார் அட்டையின் கடைசி நான்கு எண்களை மட்டுமே காண்பிக்கும் வகையிலான ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்ய myaadhar.uidai.gov.in என்கிற இணையதள முகவரியில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்