செஸ் ஒலிம்பியாட் - மீடியாக்களின் கேமராக்களை தன் பக்கம் திருப்பிய 8 வயது பாலஸ்தீன சிறுமி! போர் கண்ட பெண் சிங்கம்!

செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலக்கி வரும் அதே நேரத்தில் 8 வயது பாலஸ்தீன சிறுமி ஒருவர் மொத்த தொடரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

செஸ் ஒலிம்பியாட் 44வது தொடர் விறுவிறுப்பாக சென்னையில் நடைபெற்று வருகிறது. எதிர்பார்த்தபடியே இந்த முறை இந்திய அணி சிறப்பாக ஆடி வருகிறது. இதில் மொத்தம் 6 இந்திய அணி ஆடுகிறது. இதில் 3 அணிகள் பெண்கள் பிரிவு அணியாகும். இதுவரை இரண்டு சுற்று போட்டிகள் நடந்து முடிந்து உள்ளன. இன்று மூன்றாவது சுற்று போட்டிகள் நடக்க உள்ளன. முதல் இரண்டு சுற்று போட்டிகளிலும் இதுவரை இந்திய அணி வீரர், வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தி உள்ளனர்.

இந்த செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலக்கி வரும் அதே நேரத்தில் 8 வயது பாலஸ்தீன சிறுமி ஒருவர் மொத்த தொடரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார். தொடருக்கு வந்த வீரர், வீராங்கனைகள் யார் இது என்று உற்று கவனிக்கும் அளவிற்கும் இந்த 8 வயது பாலஸ்தீன சிறுமி ஆடி வருகிறார். மீடியாக்களின் கேமராக்களை தன் பக்கம் திருப்பி உள்ள அந்த சிறுமி யார்? அவர் செய்தது என்ன?

இந்த தொடரில் பாலஸ்தீன ஓபன் அணி சார்பாக களமிறங்கி உள்ளவர்தான் ராண்டா சேடர் . ராண்டாவிற்கு 8 வயதுதான் ஆகிறது. பாலஸ்தீனத்தை சேர்ந்தவர். அங்கு உள்ளூர் அணிகளில் ஆடி வந்தவர், தேசிய அளவில் கடந்த 2 வருடங்களாக அதிகம் கவனிக்கப்பட்டார். தேசிய அளவில் பிரபலமாக இருந்த பெண் சாம்பியன்ஷிப் அணிகளை வீழ்த்திவிட்டு இவர் டாப் இடத்திற்கு வந்தார். தேசிய அளவில் தொடர்ந்து 1 அல்லது 2 வது இடத்தில் ராண்டா இருந்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் அங்கு தேசிய மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் அடுத்தடுத்து வெற்றிபெற்றவர் கடைசி போட்டியில் தோல்வி அடைந்தார். கடைசி இறுதி போட்டியில் தோல்வி அடைந்து வெள்ளி பதக்கம் வென்றாலும்.. தேசிய சாம்பியன்ஷிப்பில் 2வது இடத்தை 8 வயது சிறுமி பிடிப்பது எல்லாம் சாதாரண காரியம் கிடையாது. ஹங்கேரி கிராண்ட்மாஸ்டர் ஜூடித் போல்காரை பார்த்து வளர்ந்த ராண்டா.. அவரின் மூவ்களை பார்த்து பார்த்து.. அவரை போலவே ஆட தொடங்கி இருக்கிறார்.

இவரின் மூவ்களில் கூட ஜூடித் போல்காரின் பாதிப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் சின்ன வயதில் இருந்தே செஸ் ஆடி வந்தார். ராண்டா மிகவும் வறுமையான குடும்பத்தை சேர்ந்தவர். இவர் வீடு இருக்கும் ஹெப்ரான் பகுதியும் கடுமையாக போரால் பாதிக்கப்பட்ட பகுதியாகும். பல முறை அகதிகள் கேம்பில், பள்ளியில் தூங்கி, உயிரை காப்பாற்றிக்கொண்டு இவர் செஸ் ஆடி இருக்கிறார். போரில் இருந்து மகளின் கவனத்தை திருப்பி வேண்டும் என்பதற்காக இவரின் தந்தை செஸ் கற்றுக்கொடுத்துள்ளார்.

இதனால் 4 வயதிலேயே காய்களை நகர்த்த தொடங்கிய ராண்டா இப்போது பாலஸ்தீன அணியின் முக்கியமான வீரராக உருவெடுத்துள்ளார். கொஞ்சம் கொஞ்சமாக பல்வேறு போட்டிகளில் ஆடியவர் இப்போது தேசிய அளவில் அங்கு சிறந்த பெண் வீரர். இந்த தொடரில் ஹங்கேரி வீராங்கனை ஜூடித்தை பார்க்க வேண்டும் என்பதற்காகவே அவர் இந்தியாவிற்கு வர தீவிரமாக ஆசைப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சர்வதேச அளவில் இவரின் ரேங்க் 98388.. இவரின் பிறந்த வருடம் 2014

தனது கலைந்த முடி.. போர் பற்றிய சுவடே இல்லாத க்யூட் முகம்.. இவர் நடந்து வரும் ஸ்டைல் எல்லாம் சென்னை ஒலிம்பியாட்டை புரட்டி போட்டுள்ளது. 3 நாட்களிலேயே அங்கு இருக்கும் பலருக்கும் செல்ல குட்டியாக ராண்டா மாறிவிட்டார். அதிலும் முதல் போட்டியிலேயே கோமோரோஸ் அணியை வீழ்த்தி.. நான் வெறும் செல்லக்குட்டி அல்ல.. செஸ் குட்டி என்பதை நிரூபித்து இருக்கிறார் இந்த போர் கண்ட பெண் சிங்கம்!
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்