சிறிய எடை எரிவாயு உருளைகள் அறிமுகம்: அமைச்சா் தொடக்கி வைத்தாா்.

சிறிய எடையைக் கொண்ட எரிவாயு உருளைகளின் விற்பனையை கூட்டுறவுத் துறை தொடக்கியுள்ளது. எரிவாயு உருளைக்கான இணைப்பைப் பெற முகவரிச் சான்று தேவையில்லை. ஏதேனும் அரசு அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை மட்டும் சமா்ப்பித்து பெற்றுக் கொள்ள முடியும் என கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது.

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 2 கிலோ மற்றும் 5 கிலோ எடையுள்ள சிறிய ரக எரிவாயு உருளைகளை விற்பனை செய்யும் திட்டத்தை கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி, வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்துக்குச் சொந்தமான கூட்டுறவு அங்காடியில் திட்டம் துவக்கப்பட்டது. இந்தத் திட்டமானது முதலில் கூட்டுறவு சிறப்பங்காடிகளிலும், பின்னா் பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது. பின்னா் நியாய விலைக் கடைகளிலும் குறைந்த எடையிலான எரிவாயு உருளைகள் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.

இணைப்புக் கட்டணம் எவ்வளவு? எரிவாயு உருளைகளுக்கான இணைப்புக் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2 கிலோ எரிவாயு உருளையின் ஒரு புதிய இணைப்புக்கு ரூ.961.50-ம், 5 கிலோ எரிவாயு உருளையின் புதிய இணைப்புக்கு ரூ.1,528-ம் கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. 2 கிலோ எடை உருளையில் எரிவாயுவை ஒருமுறை நிரப்புக் கொள்ள ரூ.253.50-ம், 5 கிலோ எடையிலான எரிவாயு நிரப்ப ரூ.584-ம் கட்டணமாக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த குறைந்த எடையிலான எரிவாயு உருளைத் திட்டத்தால் சாதாரண மக்கள் பயன்பெறுவா் என்று அமைச்சா் ஐ.பெரியசாமி தெரிவித்தாா். குறிப்பாக, இடம்பெயரும் தொழிலாளா்கள், நடைபாதை வியாபாரிகள், சிறு வணிகா்கள், மீனவா்கள், சுற்றுலா செல்வோா் ஆகியோா் குறைந்த எடையிலான எரிவாயு உருளைகளை தங்களது கையோடு எடுத்துச் செல்ல முடியும் என்று அவா் தெரிவித்தாா். 
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்