சிறுவனுக்கு காயத்திற்கு தையல் போடுவதற்கு பதிலாக fevikwik போட்டு விட்ட டாக்டர்: அதிர்ச்சி அடைந்த பெற்றோர்

விளையாடும் போது கீழே விழுந்து அடிபட்ட சிறுவனுக்கு தையல் போட்டு சிகிச்சை அளிப்பதற்கு பதிலாக பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை ஒட்டுவதற்காக உபயோகப்படும் பெவி குவிக்கை மருத்துவர் தடவி விட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் சிக்கி கீழே விழுந்து அடிபடும் போது ஏற்படும் வெட்டுக்காயங்களுக்கு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்படும். பிறகு காயத்தின் தன்மைக்கு ஏற்ப தையல்கள் போடப்படுவதுண்டு. காயங்கள் விரைவாக ஆறுவதற்காக தையல்கள் போட்டு மருந்து மாத்திரைகளையும் மருத்துவர்கள் கொடுத்து அனுப்புவார்கள். சிறிய அளவிலான வெட்டு காயங்களுக்கான பொதுவான மருத்துவ சிகிச்சையாக இந்த நடைமுறைதான் பெரும்பாலான மருத்துவமனைகளில் கடைபிடிக்கப்படுகிறது.

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசூகூர் பகுதியை சேர்ந்தவர் வம்சி கிருஷ்ணா. தனது உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக தனது மனைவி மற்றும் 7 வயது மகன் பிரவீன் சவுத்ரியுடன் வம்சி கிருஷ்ணா தெலுங்கானாவின் கதவ்வால் மாவட்டத்தில் உள்ள அய்சா பகுதிக்கு சென்றார். அங்கு சென்ற பிறகு சிறுவன் தனது வயதுக்கேற்ற குறும்புத்தனத்துடன் ஓடி ஆடி விளையாடியுள்ளான். 

அப்போது எதிர்பாராத விதமாக சிறுவன் கீழே விழுந்தான். இதில் தலையில் அடிபட்டது. இடது கண் ஓரமாக அடிபட்டது. காயம் சற்று ஆழமாக இருந்ததால் வலியால் துடித்து சிறுவன் அலறினான். இதனால் பதறிப்போன சிறுவனின் பெற்றோர்கள், உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பணியில் இருந்த டாக்டர் சிறுவனுக்கு தலையில் சிகிச்சை அளிக்கிறேன் என்ற பெயரில் பொருட்களை ஒட்டுவதற்காக உபயோகப்படும் பெவி குவிக்கை தடவி விட்டுள்ளார்.

இதனால் பதறிப்போன பெற்றோர்கள், மருத்துவரிடம் இது குறித்து கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். ஆனாலும் வம்சி கிருஷ்ணனை சாக்கு போக்கு சொல்லி சமாளிக்க மருத்துவமனை நிர்வாகம் முயற்சித்து இருக்கிறது. ஆனாலும், முறையாக சிகிச்சை அளிக்காத மருத்துவமனைக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று முடிவு செய்த சிறுவனின் தந்தை வம்சி கிருஷ்ணா, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

உண்மையில் இவர் மருத்துவர்தானா? என்று கேள்வி எழுப்பும் வகையில் அந்த தெலுங்கானாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர் நடந்து கொண்ட விதம் பல்வேறு தரப்பினர் மத்தியிலும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தினர். சுகாதாரத்துறையினருக்கு இந்த தகவல் பறக்கவே, மருத்துவமனைக்கு வந்து ஆய்வு செய்த சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு சீல் வைத்தனர்.
Source from :oneindia tamil


-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்