பேராவூரணி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த கணவர்; காப்பாற்ற முயன்ற மனைவியும் உயிரிழப்பு

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த கணவனும், அவரைக் காப்பாற்ற முயன்ற மனைவியும் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக முழுவதும் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது . தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது . சில இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன. மரக்கிளைகள் உடைந்து விழுந்துள்ளன. 

 தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே மிதியக்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் உடையப்பன் (70). இன்று (மே 2) அதிகாலை சுமார் 3 மணிக்கு அவர் இயற்கை உபாதையை கழிக்க வீட்டுக்கு வெளியே வந்திருக்கிறார்.

அப்போது அப்பகுதியில் மழையால் மின் கம்பி அருந்து விழுந்து கிடந்துள்ளது. மின் கம்பியை கவனிக்காமல் சென்ற உடையப்பன் எதிர்பாராமல் அதை மிதித்துள்ளார். அதிலிருந்து உயர் அழுத்த மின்சாரம் அவர் மீது பாய்ந்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி அவர் துடிதுடித்து உயிரிழந்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டுக்குள்ளிருந்து ஓடி வந்த அவரது மனைவி சம்பூரணம், (55), கணவர் துடிதுடித்ததை பார்த்ததும் விரைந்து சென்று அவரை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரையும் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவரும் உயிரிழந்தார். 

தகவல் அறிந்து வந்த பேராவூரணி போலீஸார் இருவரின் உடல்களை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மின்சாரம் தாக்கி கணவனும், மனைவியும் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்